புதுக்கோட்டை:புதுக்கோட்டை
மாவட்டம், கறம்பக்குடி அருகே ரேசன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டவரை
புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி பகுதியில்
ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை
காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டனர். அப்போது, வெட்டன்விடுதி பூக்காரத் தெருவைச் சேர்ந்த எஸ்.ஆனந்தகுமார்(45)
என்பவரது வீட்டில் 22 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
தெரியவந்தது. தொடர்ந்து, அரிசி மூட்டைகள், பதிவு எண் இல்லாத மொபட் ஆகியவற்றை பறிமுதல்
செய்ததோடு, ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கீரமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்தவாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அம்மனே வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றுவந்தன.கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதி பெண்கள் குடங்களில் நெல்மணிகளை நிரப்பி, தென்னம்பாளைகளை வைத்து மலர்களால் அலங்கரித்த குடங்களை சுமந்தவாறு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயில் அருகே தென்னம்பாளைகளை வைத்துவிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு திரவிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவில், மேற்பனைக்காடு, செரியலூர், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை:திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர்
மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர்
சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,திருப்பூர்
மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலை
கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசும், காவல்துறையும் செய்தியாளர்களின்
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கச்செயலர் சா.ஜெயப்பிரகாஷ், பொருளாளர் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், செய்தியாளர்கள் ஷேக், மோகன்ராம்,ராஜ்குமார், பாண்டி, நியாஸ், தண்ணீர்மலை, பாபு,ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செயற்குழு உறுப்பினர் ம.மு.கண்ணன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள செங்கமேடு ஊராட்சி கண்ணுத்தோப்பு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டியின் மின்மோட்டார் சிலமாதங்களு்கு முன்பு பழுதாகியுள்ளது. அதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.இதனால், அப்பகுதி மக்கள் உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் ஒன்றிய அலுவலர்கள், கறம்பக்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தான்
பயின்ற அரசுப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை அரசுப்பள்ளி
ஆசிரியர் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சேர்ந்தவர்
தி.குணசேகரன். இவர் வல்லத்திராகோட்டை அரசு
மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும்
பணியாற்றி வருகிறார். இவர் அரசுப் பள்ளிகளில்
பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு
தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செயது
வருகிறார். இதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் 22
விருதுகள் வழங்கி அவரை சிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில்,
அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவரான முறையில் அந்தப்பள்ளியில்
படிக்கும் அத்தனை மாணவர்களக்கும் சுமார்
30 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை ஆசிரியர்
குணசேகரன் புதன்கிழமை வழங்கினார். மேலும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மணி
ஒலிப்பான், ரூ.15 ஆயிரம் மதிப்பில்
மேசைகள், மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டிக்கா
க ரூ.50 ஆயிரம் என ரூ.1
லட்சம் மதிப்பிலான உதவியை குணசேகரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.ஆர்.வடிவேலு, கல்விக்குழுத் தலைவர் ச.சிங்காரம், பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 69 மையங்களில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோட்டில் கொரோனா 2-ஆவது
அலை வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் போட்டியாக பாதிப்பு அதிகரித்தது.
தற்போது தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில்
உள்ளது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட
நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
முதலில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது உட்பட்டவர்களுக்கும், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் ஈரோடு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக
சமீப காலங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தி
வைக்கப்பட்டது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும்
தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த
ஒரு வாரமாக தடுப்பூசி கையிருப்பு இல்லாததால்
தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு
தடுப்பூசிகள் வந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் 42 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி மையங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். முதல் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த ஆரம்ப சுகாதார மையங்கள் அருகே உள்ள பள்ளிகளில் தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு போடப்பட்டது. முதல் நாளில் மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து 2-வது நாளான திங்கள்கிழமை 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி காலை 6 மணிக்கு தொடங்கியது. ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மையத்திற்கு அதிகாலை 2 மணிக்கே பொதுமக்கள் தடுப்பூசி போட திரண்டு வந்து விட்டனர்.
இதேபோல் மற்ற மையங்களிலும் அதிக அளவில் மக்கள் திரண்டு விட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதைப்போல் ஒரு சில மையங்களில் கோவேக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் செலுத்தப்பட்டது.
சென்னை, டிச: விவோ செல்போன் நிறுவனம் சைபர் மீடியா ஆய்வு நிறுவன கூட்டுடன் நடத்திய ஆய்வில் மக்கள் செல்போன் உபயோக நேரம் அதிகரித்துள்ளது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம் 2020 என்ற தலைப்பில் ஆய்வின் கண்டுபிடிப்புகளை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு பரிமாணங்களை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அளவு, பயன்பாட்டின் போது ஊரடங்கின் தாக்கம், தனிநபர் உடல்நலம் மற்றும் சமூக உறவுகளில் பாதிக்கிறது என கண்டறிந்துள்ளது.
இந்தியாவின் நம்பகமான சந்தை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்) இந்த ஆய்வை இந்தியாவின் முதல் 8 நகரங்களில், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் செயல்படுத்தியது.
ஸ்மார்ட்போன்கள் அன்றாட நடைமுறைகளில் ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளன, இது நண்பர்கள், குடும்பம் மற்றும் உலகத்துடன் பொதுவாக இணைக்க உதவுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு மக்களைத் தாக்கியபோது ஸ்மார்ட்போன்களின் முக்கியத்துவம் உயர்ந்தது, மக்கள் பாதுகாப்பிற்காக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கட்டாயப்படுத்தினர். எனவே, ஸ்மார்ட்போன் உயிர்நாடியாக மாறியது.- இருப்பினும், அதிகப்படியான பயன்பாடு அதன் பயன்படுத்துவோருக்கு போதையாக மாறி விடுகிறது.
இந்தியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக நம்புகிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், அதிர்ச்சியூட்டும் 70% இந்தியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், அது அவர்களின் மன நலம், உடல் நலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நினைக்கிறார்கள் என்று ஆய்வு அறிக்கை பற்றி விவோ இந்தியா டைரக்டர் நிபுன் மரியா தெரிவித்தார்.
70% பேர் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு தங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக உணர்கின்றனர். 84% பேர் எழுந்த 15 நிமிடங்களுக்குள் தங்கள் தொலைபேசிகளை சரிபார்க்கின்றனர். ஸ்மார்ட்போனின் அதிகப்படியான பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் ஸ்மார்ட்போன் போதை மனித நடத்தை மற்றும் உறவுகளை பாதிக்கிறது:
89% பேர் ஸ்மார்ட்போனின் அதிகப்படியான பயன்பாடு தங்களது குடும்ப அன்புக்குரியவர் களுடன் செலவழிக்கும் நேரம் குறைந்துள்ளது. ஸ்மார்ட்போன்களிலிருந்து தனித்து வாழ்வது முக்கியம் என்று 74% பேர் கருதுகின்றனர்
74% பேர் தங்கள் மொபைல் தொலைபேசியை அவ்வப்போது சுவிட்ச் ஆப் செய்வது உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உதவும் என்று நினைக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களின் கவனக்குறைவான பயன்பாடு தங்களது உறவுகளை மோசமாக பாதிக்கிறது என்று 70% பயனர்கள் கருதுகின்றனர்
ஸ்விட்ச் ஆப் செய்வோம்: ஆரோக்கியமான மனதுக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்காகவும் சிறிது நேரம் போன் ஸ்விட்ச் ஆப் செய்வோம். ஸ்மார்ட்போன்களில் குறைந்த நேரத்தை செலவிட்டால் 73% மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு, ஆக: செப்-1-இல் பள்ளிகள் திறப்பு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்று வருகின்றனர்.
ஏறத்தாழ இரண்டு வருடமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு வரும் செப்டம்பர். 1 -ஆம் தேதி முதல் 9 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளிகள் திறப்பது குறித்து அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சுழற்சி முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவ ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தந்த பள்ளிகள் இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகள் குடிநீர் தொட்டிகள் கழிப்பிடம் போன்றவை தூய்மைப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. முதன்மை கல்வி அதிகாரிகள் இதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தற்போது துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளிகளை சீரமைக்கும் பணியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிகள் கிருமிநாசினி மூலம் சுத்தப் படுத்தப்பட்டன. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கிருமி நாசினியாக பயன்படும் வகையில் வகுப்பறையின் நுழைவாயிலில் வைக்கப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு முககவசம் இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுதவிர மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் குழுவாக கூடி உணவு அருந்துவதை தவிர்த்தல், வளாகங்களில் கூடி நின்று பேசுதல் போன்றவற்றை தவிர்க்க கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் தேவையற்ற குப்பைகள் முட்புதர்கள் மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக வகுப்பறைகள் மூடப் பட்டிருப்பதால் வகுப்பறையை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதுபோல் கல்லூரிகளில் உள்ள வளாகத்திலும் தூய்மைப்படுத்தும் பணி தீவரமாக நடந்து வருகிறது. மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக மெக்கானிக் கடையில் பள்ளி வாகனங்கள் விடப்பட்டு சரி பார்க்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை, ஜூலை, 18: அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் ... புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படை மகளிரின் முன்னேற்றம்தான் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகளிரின் முன்னேற்றத்திற்கென பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்; மகளிர் கட்டணமின்றி பயணம் செய்ய உத்தரவிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இத்திட்டம் மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது: