logo
வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஈரோடு ஆட்சியரிடம் மேடை நாடக கலைஞர்கள்   மனு

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஈரோடு ஆட்சியரிடம் மேடை நாடக கலைஞர்கள் மனு

08/Feb/2021 07:01:51

ஈரோடு, பிப்: வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென வலியுறுத்தி மேடை நாடகக் கலைஞர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை  ஆட்சியரிடம் வழங்கினர்.

இதில், தமிழ்நாடு நாடகம் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் நாடக கலைஞர்கள்  திரண்டு வந்து அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லாத காரணத்தால் மேடை நாடக நடிகர்கள் நடிகைகள் ஒப்பனையாளர் இசையமைப்பாளர்கள் மேடை பணியாளர்கள் நாடக அரங்க அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எவ்வித வருமானமின்றி வறுமையில்  தள்ளப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து  வாடுகின்றனர்.

 எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வேறு எந்த ஒரு தொழிலும் செய்யத் தெரியாத காரணத்தால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம். ஒரு சிலர் கடன் சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளனர். முதலமைச்சர் ஜனவரி முதல் பொது நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனினும் கிராமப்புறங்களில் நாடகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள போலீசாரிடம் அனுமதி கோரினால் அவர்கள் அனுமதிக்க மறுத்துவருகின்றனர்.  கடந்த  10 மாத காலமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், மேடை  நிகழ்ச்சிகள் நடத்த  அனுமதி வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.


Top