logo
தமிழகத்தில் நடைபெறக்கூடிய குடி மராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் நடைபெறக்கூடிய குடி மராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.

09/Feb/2021 05:58:02

குடிமராமத்து பணிகள் துவங்கும் முன்பு வேலை நடைபெறும் இடத்தின் புகைப்படத்தையும் வேலை முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைய தளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இது தொடர்பாக மதுரை சேர்ந்த வழக்கறிஞர்  அன்புநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்காக தாக்கல் செய்த மனுவில். ஆறு, ஏரி, குளங்களை, ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்திருந்தார்.

 தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம் ஆகும். ஆகவே தமிழகத்தின் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை, அவற்றின் சர்வே எண்,  ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல மேலும் ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும்.

எனவே மனுதாரரின் கோரிக்கையை  குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதள தொடங்கி அதில் குடிமராமத்து பணி நடைபெறக்கூடிய இடம் பணியின் விவரம் கால அளவு அதற்கான செலவழிக்கக் கூடிய தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் என முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என   உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Top