16/May/2021 11:40:19
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதியும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, புதுக்கோட்டைஎம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப்பின்னர், சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. குடுமியான்மலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையம் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன்,
புதுக்கோட்டையிலிருந்து
குடுமியான்மலை குறைவான
தொலைவிலேயேஅமைந்துள்ளது. வெளியூர்களில்ல் இருந்து அழைத்து வரப்படும் கோவிட்
நோயாளிகள்
புதுக்கோட்டை செல்லாமல் நேரடியாக குடுமியான்மலை கோவிட்
கவனிப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு உரிய
சிகிச்சை வழங்கப்படும். கோவிட் தடுப்புப்பணியினை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து
சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர்
ரகுபதி.
சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது: புதுக்கோட்டை
மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு,
பகலாக கோவிட் தடுப்புப் பணியில் ஈடுபட்டு
வரும் மருத்துவர்கள், வருவாய்துறையினர் காவல் துறையினர் உள்ளாட்சி அமைப்பு
அலுவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவரும்
பாராட்டுக்குரியவர்கள்.
நோய்தடுப்பு நடவடிக்கைகளிலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.