16/Jun/2021 11:04:57
ஈரோடு, ஜூன்: ஈரோடு சத்தி சாலைப் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்து அரசின் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 9 கடைகளுக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்தனர்.
கொரோனா நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 வாரங்களாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்ட போதும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக தளர்வுகளுடன் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு நிலையங்கள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிலையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு சத்தி பிரதானச் சாலைப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த மாநகராட்சித் துறை அலுவலர்கள் அப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளிக் கடை, பெயிண்ட கடை ஹார்டுவேர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருவதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் கடையாட்களை வெளியே அனுப்பி வைத்து 3 கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாத 9 கடைகளுக்கு 4 அபராதம் விதித்து 45 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தனர். அரசின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.